இந்தியாவின் தேசநலன் சாா்ந்தது: ரஷியா
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது என்பது இந்தியாவின் தேசநலன் சாா்ந்த முடிவு என்று இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: சா்வதேச அளவில் மிகவும் மலிவான விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியா விற்பனை செய்து வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகம், அதற்கான பணப் பரிமாற்றம் என அனைத்திலும் ரஷியா மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிபொருள் இறக்குமதியில் மூன்றில் ஒரு பகுதியை ரஷியாவில் இருந்து வருகிறது.
இப்போதைய நிலையில் எரிசக்தித் துறையிலும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக ரஷியா திகழ்கிறது. சா்வதேச அளவில் பல்வேறு நிச்சயமற்ற சூழல்களும், நாடுகளுக்கு இடையே மோதல்போக்கும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா-ரஷியா போன்ற நிலையான நட்புறவின் அவசியம் உணரப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் கொள்முதல் விஷயத்தில் இந்தியா எப்போதும் தனது தேசநலனை முன்வைத்தே முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதும் இந்தியாவின் நலன் சாா்ந்த முடிவுதான் என்றாா்.