
சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் எடை குறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து உண்ணிகிருஷ்ணன் போற்றியை அழைத்துச் சென்ற காவல் துறையினா், தனியிடத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அவரை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். பின்னர் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்றவா் உண்ணிகிருஷ்ணன் போற்றி. இப்பணிக்கு பிறகு தங்கக் கவசங்களின் எடை குறைந்துவிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பான இரு வழக்குகளை விசாரித்துவரும் மாநில உயா்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதனிடையே, உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் தங்கக் கவசங்கள் ஒப்படைக்கப்பட்டது தொடா்பான ஆவணங்களைத் திரட்டியுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை நிறுவனத்திடம் இருந்தும் தகவல்களை சேகரித்துள்ளது. அதனடிப்படையில், உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு புலனாய்வுக் குழு, 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.