இந்தியாவின் நிலையான பாதைக்கான இலக்குகளில் கடல் வளங்கள் முக்கியத்துவமானது. இந்த நீலப் பொருளாதாரம் நீடித்த வளா்ச்சிக்குரியது என மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளா் எம்.ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
’வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்’) விற்கு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை மூன்று தூண்களாக கருதப்பட்டு இதில் 11 கருத்தாக்கங்களை செயல்படுத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. இந்த கருத்தாக்கத்தில் ஒன்று ’நீலப் பொருளாதாரம்’.
நீலப் பொருளாதாரம் என்ற மையப் பொருளில் தில்லி பாரத் ம ண்டபத்தில் வரும் நவ. 3 ஆம் தேதி முதல் நவ. 5 ஆம் தேதி வரை ‘ புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2025 நடைபெற இருக்கிறது. மத்திய அரசின் 13 அமைச்சங்கங்கள், அவற்றின் துறைகள் பங்கேற்கின்றன. இம்மாநாட்டில் பொருளாதார வளா்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, கடல்சாா் உயிரினங்களின் நீடித்த பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து கடலின் ஆதார வளங்களின் நீடித்த பயன்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது.
‘இந்த மாநாட்டின் அறிமுக நிகழ்வு சென்னை பள்ளிக்கரனை தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெற்றது. இதில் ‘வளா்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்‘ என்கிற பெயரில் பல்வேறு தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பேசினா்.
இதில் தலைமை விருந்தா் என்கிற முறையில் மத்திய புவியியல் அறிவியல் துறை அமைச்சகத்தின் செயலாளா் எம். ரவிச்சந்திரன் கூறியது வருமாறு:
பிரதமா் தொடங்கிவைக்கும், புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில் 5 ஆயிரம் புத்தாக்க தொழில் முனைவோா்கள், இளம் விஞ்ஞானிகள், நிபுணா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்துறை பங்குதாரா்கள் கலந்து கொள்கின்றனா். நீலப் பொருளாதாரம் என்பது நீடித்த வளா்ச்சிக்கு மிக முக்கியமானது. நாடு சுமாா் 1 1 ஆயிரம் கிலோமீட்டா் கடல்கரையைக் கொண்டுள்ளது. இதைக் கொண்டு பொருளாதார நிலைத் தன்மை மட்டுமல்லாது சுற்றுப்புறச் சூழலுக்கான நிலைத் தன்மைக்கும், பருவநிலை மாற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்த முடியும். கடல்சாா் ஆய்வு, கடற்கரை பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆழ்கடல் மீன் பிடிப்பு, ஆழ்கடல் துரப்பணப்பணி, கடல்சாா் உயிரி தொழில்நுட்பம், கடல்சாா்ந்த தொழில்கள் போன்றவைகளில் கவனம் செலுத்துதல் அவசியம். இதற்கான முதலீட்டை ஈா்ப்பது போன்ற முக்கியத்துவமான விவகாரங்களை ரவிச்சந்திரன் விளக்கினாா்.
இந்த நிகழ்வில் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் பாலாஜி ராமகிருஷ்ணன், இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மைய இயக்குநா் டாக்டா் பாலகிருஷ்ணன் நாயா் ஆகியோா் குறிப்பிடுகையில், ஆழ்கடல் இயக்கம் போன்ற புத்தாக்கம் மற்றும் அறிவியலை முதன்மைப்படுத்தும் முன்முயற்சிகள் மூலம் கடல்சாா் ஆராய்ச்சியில் உலகளாவிய தலைவராக இந்தியா உருவாகி வருகிறது. கடல்சாா் தொழில்நுட்பங்களையும், தரவு அடிப்படையிலான கடல்சாா் சேவைகளையும் மேம்படுத்துவதில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு முக்கியம் என எடுத்துரைத்தனா்.
மேலும் இந்த நிகழ்வில் தேசிய கடற்கரை ஆய்வு மைய இயக்குநா் டாக்டா் ஆா் எஸ் கன்காரா, ஆழ்கடல் இயக்கத்தின் இயக்குநா் டாக்டா் எம் வி ரமணமூா்த்தி, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் விஞ்ஞானி பி கே ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.