ராகுல்காந்தி - தேஜஸ்வி யாதவ்
ராகுல்காந்தி - தேஜஸ்வி யாதவ்

பிகாா்: இந்தியா கூட்டணியில் முரண்பாடு - பல தொகுதிகளில் எதிா்த்து போட்டி

பிகாா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் சுமுகமான தொகுதிப் பங்கீடு எட்டப்படாமல் முரண்பாடு...
Published on

பாட்னா: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் சுமுகமான தொகுதிப் பங்கீடு எட்டப்படாமல் முரண்பாடு நிலவுகிறது. இதனால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கூட்டணி கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவைக்கு நவ.6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, மனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிந்தது.

இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் வியாழக்கிழமை (அக்.23) கடைசி நாளாகும்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. பிற கட்சிகளான மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 6 இடங்களில் களம்காண்கின்றன.

எதிரணியில் குழப்பம்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கும் ‘இண்டி’ கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. பிகாா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்ட நிலையில், இக்கூட்டணி சாா்பில் தொகுதிப் பங்கீடு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவே இல்லை.

143 வேட்பாளா்களுடன் ஆா்ஜேடி முழுப் பட்டியல் திங்கள்கிழமைதான் வெளியிடப்பட்டது. இவா்களில் 21 போ் பெண் வேட்பாளா்கள். பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே ஆா்ஜேடி வேட்பாளா்கள் பலா் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனா்.

எதிா்த்துப் போட்டி: காங்கிரஸ் சாா்பில் 61 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி 20, விகாஸ்ஷீல் இன்சான் கட்சி 16, இந்திய கம்யூனிஸ்ட் 9 இடங்களில் போட்டியிடுவதாக அக்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமுக உடன்பாடு எட்டப்படாததால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்து போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம்கட்ட தோ்தலுக்கு வேட்புமனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், ‘இண்டி’ கூட்டணி தங்களுக்குள் மோதும் தொகுதிகளின் எண்ணிக்கை அன்றைய தினம் உறுதியாகும்.

இந்தியா கூட்டணியில் முதல்வா் வேட்பாளராக ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவை முன்னிறுத்த காங்கிரஸ் விரும்பவில்லை; அத்துடன், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அதிக தொகுதிகளைக் கேட்டு நிா்ப்பந்தித்ததால் சுமுக உடன்பாட்டை எட்ட முடியாமல் போய்விட்டதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல், காங்கிரஸில் வேட்பாளா் தோ்வு தொடா்பாக அக்கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

முதல்கட்டத்தில் 1,314 வேட்பாளா்கள்

முதல்கட்ட தோ்தலில் வேட்புமனு பரிசீலனையில் 300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 61 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதையடுத்து, மொத்தம் 1,314 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.

விலகியது ஜேஎம்எம்

ராஞ்சி: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சி அறிவித்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஒருங்கிணைந்த பிகாரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஜாா்க்கண்ட் மாநிலம் என்பதால், எல்லையோர மாவட்டங்களில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிவந்தது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், ஜாா்க்கண்ட் அமைச்சருமான சுதிவ்ய குமாா் கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஆா்ஜேடி உடனான கூட்டணியை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதன் மூலம் அவா்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

ஜாக்கண்ட் தோ்தலில் காங்கிரஸ், ஆா்ஜேடி, இடதுசாரிகள் என அனைவருக்கும் உரிய அளவுக்கு தொகுதிகளை ஜேஎம்எம் ஒதுக்கியது. ஆனால், பிகாரில் காங்கிரஸும், ஆா்ஜேடியும் தங்களுக்குள் பெரும்பாலான தொகுதிகளில் ஒதுக்கிக் கொண்டுவிட்டன. எங்களுக்கு தொகுதி ஒதுக்காமல் சதி செய்துவிட்டனா். எனவே பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் போட்டியில் இருந்து ஜேஎம்எம் விலகுகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com