
பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பாஜக, நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.
பிகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்தார். மேலும், எங்கள் கூட்டணியின் தலைவர் தேஜஸ்வி என்று அறிவித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் அமித் ஷா, உங்கள் கூட்டணியின் தலைவர் யார் என்று? எனவும் அசோக் கெலாட் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய தேஜ்ஸ்வி யாதவ், முதல்வர் வேட்பாளராக தன்னை ஏற்றுக் கொண்டதற்காக, அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பாஜக, நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை மட்டும் அமித் ஷா ஏன் நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை? இதுதான் நிதீஷ் குமாரின் கடைசி தேர்தல். அதில், அமித் ஷா தெளிவாக இருக்கிறார் என்றும் தேஜஸ்வி கூறியுள்ளார்.
தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஒரு சில குளறுபடிகள் நிலவியதால், காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முக்கிய தலைவர்களை சந்தித்து சுமூக முடிவை எடுத்து, இன்று முதல்வர் வேட்பாளரையும் அறிவித்திருக்கிறார்கள். கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக மாறிவிடும் என்பதால், உரிய நேரத்தில் மகாகத்பந்தன் கூட்டணி விழித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.