

சாலையில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதே, ஆம்னி பேருந்து பயங்கரமாக தீப்பற்றி எரிந்து அதில் 20 பேர் பலியாகி, அவர்களது பயணத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத இறுதிப் பயணமாக மாற்றிவிட்டது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சின்ன டெக்குரு கிராமம் அருகே பெங்களூரு - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் ஒரு மிகப்பெரிய ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் விடியோக்கள் வெளியாகி பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது.
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்தில் 20 பேர் பலியாகிவிட்டனர். 20 பேர் ஜன்னல் வழியாகக் குதித்து காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுளள்னர். பலியானவர்களில் இதுவரை 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 9 உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
பேருந்து தீப்பிடித்தபோது, கதவுகள் பூட்டிக்கொண்டதே பயணிகள் தப்பிக்க முடியாமல் போனதாகவும், சிலரால் மட்டுமே ஜன்னல்களை உடைத்துக் கொண்டே வெளியே குதிக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதுகிறது. மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனம் அப்பளம் போல நொருங்கி, பேருந்தின் முன்பக்கத்தின் கீழ் பகுதியில் மாட்டிக் கொள்கிறது.
இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் வெளியாகி தீப்பற்றி எரிந்து அதுவே பேருந்திலும் தீப்பிடிக்கக் காரணமாகியிருக்கிறது.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட பேருந்து
தற்போது விபத்தில் சிக்கி தீக்கிரையான ஆம்னி பேருந்து மீது இதுவரை 16 போக்குவரத்து விதிமீறலுக்கான செல்லான்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி நாசமான காவேரி போக்குவரத்து பேருந்து இதுவரை ஏராளமான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான விதிமீறல்கள் செய்திருந்தாலும், பேருந்து தகுதி மற்றும் காப்பீட்டு சான்றிதழ்களை சரியாகப் பராமரித்து வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த பேருந்து பற்றி விசாரணை நடத்திய அதிகாரிகள், உரிய சான்றிதழ்களை சரியாக வைத்திருந்த போதும், இந்த பேருந்து அவ்வப்போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. இதுவரை தெலங்கானாவில் மட்டும் 16 செல்லான்களுடன் ரூ.23,000 அபராதம் செலுத்தப்படாமல் பாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து நாள்களுக்கு முன்பு...
ராஜஸ்தான் மாநிலம் தையாத் கிராமத்தில், கடந்த பத்து நாள்களுக்கு முன்புதான் அதாவது அக்டோபர் 14ஆம் தேதி இதேப்போன்ற சம்பவம் நடந்துளள்து. ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இதற்குக் காரணம், பேருந்தில் இருந்த குளிர்சாதன கருவியில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.