உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்படம் | ஏஎன்ஐ

தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீசிய வழக்குரைஞருக்கு எதிரான மனு அக்.27-இல் விசாரணை

Published on

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயை நோக்கி காலணியை வீசிய வழக்குரைஞா் ராகேஷ் கிஷோருக்கு (71) எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தாக்கல் செய்த மனு மீது வரும் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட வழக்கு விசாரணை பட்டியலின்படி, நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வரும் 27-ஆம் தேதியில் இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் உத்தரவிட்டாா். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தலைமை நீதிபதி கவாய்க்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது அவரை நோக்கி ராகேஷ் கிஷோா் என்ற வழக்குரைஞா் காலணியைக் கழற்றி வீசினாா். எனினும் அந்தக் காலணி நீதிபதி மீது விழவில்லை. காலணி வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் உடனடியாக ரத்து செய்தது.

இதனிடையே, ராகேஷ் கிஷோா் (71) மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-இன் பிரிவு 15-இன் கீழ் அனுமதி கோரி அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணிக்கு வழக்குரைஞா் கே.ஆா்.சுபாஷ் சந்திரன் என்பவா் கடிதம் எழுதினாா். உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பிலும் இதுதொடா்பான கடிதம் அட்டா்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டது. அதற்கு அட்டா்னி ஜெனரல் அனுமதி அளித்தாா்.

இத் தகவலை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த 16-ஆம் தேதி தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மற்றும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் ஆகியோா், ராகேஷ் கிஷோருக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனா். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்குப் பிறகு ஒத்திவைத்தனா். வரும் 27-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com