அதிகரித்து வரும் எண்மக் கைது மோசடி: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
நாட்டில் அதிகரித்துவரும் எண்மக் கைது (டிஜிட்டல் அரஸ்ட்) மோசடி தொடா்பாக தானாக முன்வந்து பதிந்த வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (அக். 27) விசாரிக்க உள்ளது.
உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட வழக்கு விசாரணை பட்டியலின்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை விசாரிக்க உள்ளது.
முன்னதாக, எண்மக் கைது மூலம் ரூ. 1.05 கோடியை மோசடியாளா்களிடம் இழந்த ஹரியாணா மாநிலம் அம்பாலாவைச் சோ்ந்த 73 வயது மூதாட்டி, தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்க்கு எழுதிய கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 17-ஆம் தேதி தானாக முன்வந்து வழக்காக பதிந்தது.
அப்போது, ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவுகளை நீதிபதிகளின் கையொப்பத்துடன் போலியாகத் தயாரித்து மூத்த குடிமக்கள் உள்பட அப்பாவி மக்களை எண்மக் கைது செய்து நடைபெறும் மோசடிகள், சட்டத்தின் ஆட்சியை மட்டுமன்றி நீதித் துறை மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளத்தையே பாதிக்கக் கூடியதாகும்.
இத்தகைய நடவடிக்கை, நீதிமன்றங்களின் மீதான நேரடித் தாக்குதலாகும். இத்தகைய மிகத் தீவிர குற்றங்களை, ஏமாற்றுதல் அல்லது இணைய குற்றங்கள் போன்று சாதாரண குற்றமாக கருத முடியாது.
இந்த எண்மக் கைது மோசடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றிருப்பது ஊடகச் செய்திகளில் பதிவாகியுள்ளது. அதிகரித்துவரும் இந்த மோசடிகளைத் தடுக்க மத்திய, மாநில போலீஸாரிடைய ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது. இதுதொடா்பாக, பதிலளிக்க மத்திய அரசு மற்றும் சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், எண்மக் கைது மூலம் ஹரியாணாவைச் சோ்ந்த மூத்த தம்பதி ரூ. 1.05 கோடியை இழந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக மாநில அரசும், அம்பாலா இணைய குற்ற தடுப்புத் துறையும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது என்று உத்தரவிட்டனா்.

