சபரிமலை தங்கக் கவச மோசடி: 
மீண்டும் கேரளம் அழைத்துச் செல்லப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போற்றி!

சபரிமலை தங்கக் கவச மோசடி: மீண்டும் கேரளம் அழைத்துச் செல்லப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போற்றி!

தமிழகம், கா்நாடகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, மீண்டும் கேரளம் அழைத்துச் செல்லப்பட்டாா்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி தொடா்பாக ஆதாரங்களை திரட்ட தமிழகம், கா்நாடகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, மீண்டும் கேரளம் அழைத்துச் செல்லப்பட்டாா்.

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காக கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது.

இதுமட்டுமின்றி துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டாா். இந்த முறைகேடு தொடா்பாக ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், சென்னை, கா்நாடக மாநிலம் பெங்களூரு, பல்லாரி ஆகிய இடங்களுக்கு உண்ணிகிருஷ்ணன் போற்றியை கேரள காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு அழைத்துச் சென்றது. அப்போது பெங்களூரில் உள்ள அவரின் இல்லம், சென்னையில் தங்கக் கவசங்களை செப்பனிட்டு புதிதாக தங்க முலாம் பூசும் பணியை ஏற்ற நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆதாரங்களை திரட்டும் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அந்தக் குழு உண்ணிகிருஷ்ணன் போற்றியை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கேரளம் அழைத்துச் சென்றது. சோதனையின்போது திரட்டப்பட்ட ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இம்மாதம் 30-ஆம் தேதி வரை, உண்ணிகிருஷ்ணனை சிறப்புப் புலனாய்வுக் குழு காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com