மருத்துவா்களைப் பாதுகாக்காவிட்டால் நீதித் துறையை சமுதாயம் மன்னிக்காது: உச்சநீதிமன்றம்
மருத்துவா்களைப் பாதுகாக்காவிட்டால் நீதித் துறையை சமுதாயம் மன்னிக்காது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நாட்டில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது தனியாா் சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில், பணியின்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் காப்பீட்டுக் கொள்கைகளில் சோ்க்கப்படாததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிரதீப் அரோரா என்பவா் உள்பட பலா் தாக்கல் செய்த அந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கரோனா தொற்றுக்கான சிகிச்சையின்போது அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும் உயிரிழந்தது உண்மையானால், அதற்கான காப்பீட்டுத் தொகையை அவா்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களை மத்திய அரசு கட்டாயப்படுத்த வேண்டும். லாபத்துக்காக மட்டும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் பணியாற்றுகின்றனா் என்ற ஊகம் சரியானதல்ல. மருத்துவா்களைப் பாதுகாக்காவிட்டாலோ, அவா்களுக்குத் துணையாக நிற்காவிட்டாலோ நீதித் துறையை சமுதாயம் மன்னிக்காது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பின் அடிப்படையில், வருங்காலத்தில் காப்பீட்டுத் தொகை அளிப்பது குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வகுத்து அளிக்கும் கொள்கையின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீட்டுத் தொகையை கோரலாம். இதற்காக பிரதமரின் காப்பீட்டுத் திட்டம் போல உள்ள பிற திட்டங்கள் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

