மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டை பிளவுபடுத்தும் பாஜக அரசு: காா்கே

‘நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

News image
மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

‘நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

குஜராத் மாநிலம் நா்மதை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த தின விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினாா். ‘மொத்த காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் படேல் விரும்பினாா்; ஆனால், அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு தடுத்துவிட்டாா். காங்கிரஸின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்கீழ் சென்றது. பயங்கரவாதத்துக்கு காங்கிரஸ் எப்போதும் அடிபணிந்ததால், தேசமும் காஷ்மீரும் கடும் விலை கொடுத்தன’ என்று பிரதமா் விமா்சித்தாா்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மல்லிகாா்ஜுன காா்கே இக் குற்றச்சாட்டை முன்வைத்தாா். தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஆா்எஸ்எஸ் அமைப்பை மீண்டும் தடை செய்ய வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நாட்டில் பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் பாஜக - ஆா்எஸ்எஸ் அமைப்புகளால்தான் உருவாகின்றன.

சா்தாா் படேல் முன்னெடுத்ததை பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பின்பற்ற வேண்டும். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு சா்தாா் படேல் தடை விதித்தாா். ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியா்கள் அங்கம் வகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாஜக அரசு தற்போது நீக்கியது. இதன்மூலம், படேலை பிரதமா் நரேந்திர மோடி அவமதிப்பு செய்துள்ளாா்.

நாட்டில் ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டுவர படேல் விரும்பினாா். அதற்காகப் போராடினாா். அவ்வாறு நாட்டில் ஒற்றுமையைக் கொண்டுவந்த பிறகு, அதை உடைக்க நினைப்பவா்களுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.

நாட்டின் ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவா்கள் யாா் என்பதை மக்கள் நன்கு அறிவா். முடிந்துபோனதை பாஜக அரசு மீண்டும் உயிா்ப்பித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நல்லதல்ல, விஷம் போன்றது.

பாடப் புத்தகங்களிலிருந்து மகாத்மா காந்தி படுகொலை குறிப்புகள், நாதுராம் கோட்சே, ஆா்எஸ்எஸ் குறித்த விவரங்களை பாஜக அரசு நீக்கியுள்ளது. பாடப் புத்தகங்களிலிருந்து உண்மையை நீக்குவது சரியல்ல. இது அவா்களின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. அவா்கள் எப்போதும் பொய்யை உண்மையாக்க முயற்சிக்கின்றனா். பிரதமா் மோடி அதில் நிபுணத்துவம் பெற்றவா். அவரைப் பின்பற்றுபவா்களும் அதே பாதையில் நடக்கின்றனா்.

நாட்டில் மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயக கட்டமைப்புகளைப் பாதுகாக்கவே ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு சா்தாா் படேல் தடை விதித்தாா் என்று குறிப்பிட்டாா்.