

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர் பிரேமானந்த், அமேஸான் டெலிவரி மோசடியில் சிக்கி ரூ.1.86 லட்சத்தை இழந்துள்ளார்.
இவர், சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 7 மாடல் ஸ்மார்ட் போனை அமேசானில் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருடைய வீட்டுக்கு செல்போன் பார்சல் வந்துள்ளது.
இதனைப் பிரித்துப் பார்த்த பிரேமானந்த், சந்தோஷப்படுவதற்கு பதிலாக அதிர்ச்சியடைந்தார். காரணம், பார்சலில் இருந்தது செல்போன் அல்ல. பாதி டைல்ஸ் கல்.
பிரேமானந்த் தன்னுடைய எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அக்.14ஆம் தேதி ஆர்டர் போட்ட நிலையில், அவருக்கு டைல்ஸ் வந்திருப்பதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
நல்லவேளையாக, பார்சலை பிரித்தபோது, அவர் அதனை விடியோ எடுத்துக் கொண்டார். பார்சலை பிரித்தபோது வெள்ளை நிற டைல்ஸ் இருந்தது விடியோவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து உடனடியாக தேசிய சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அவர் புகார் அளித்திருக்கிறார்.
இந்த மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்துக் கண்டறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பையிலும், இதேப்போன்று 71 வயதான பெண், ஒரு ஆன்லைன் ஆப் மூலம் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்தபோது, சைபர் மோசடியாளர்களால் 18.5 லட்சம் திருடப்பட்டுள்ளது.
ஆன்லைன் செயலியில் பால் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த நபருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், தாங்கள் பால் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் ஒரு லிங்க் அனுப்புகிறோம், அதில் உங்கள் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்தால்தான் ஆர்டர் முழுமையடையும் என்று கூறியிருக்கிறார்கள்.
அவரும் அதனை உண்மை என நம்பி, அவர்கள் கொடுத்த படிவத்தில் இருந்த விவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். சற்று நேரத்தில் அவரது மூன்று வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.18.5 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்ததன் மூலம், அவரது செல்போன் முழுக்க மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுள்ளது என்று சைபர் பிரிவு காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.