
‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக்கு கடும் பின்விளைவுகள் ஏற்படுமென்றும் ராகுல் காந்தி பேசினார்.
பிகாரில் 110 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் உள்ளடக்கி மொத்தம் 1,300 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற ராகுல் காந்தி தலைமையிலான வாக்குரிமைப் பேரணியின் இறுதி நாளில் இன்று (செப். 1), ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டின் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ (எம் எல்) விடுதலை பொதுச்செயலர் தீபங்கர் பட்டாச்சார்யா, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம். ஏ. பேபி, கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜா, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. யூசுஃப் பதான், சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) சஞ்சய் ராவத் மற்றும் ’இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த பிற முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இன்றுடன் (செப். 1) முடிவடைந்த ‘வாக்குரிமைப் பேரணியில்’ பேசிய ராகுல் காந்தி, “அரசமைப்பை கொல்ல அவர்களை(பாஜக) நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்காகவே இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு ஆதரவளித்துள்ளனர். பிகார் ஒரு புரட்சிகர மாநிலம். நாட்டுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது பிகார்.
பாஜகவைச் சேர்ந்த மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அணு குண்டை விடப் பெரிதாக ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? - அதுதான் ஹைட்ரஜன் குண்டு!
ஆகவே, பாஜகவைச் சேர்ந்த மக்களே தயாராக இருங்கள், ஹைட்ரஜன் குண்டு வந்துகொண்டேயிருக்கிறது.
வாக்குத் திருட்டில் நடைபெற்ற உண்மைகளை மக்கள் விரைவில் அறிந்துகொள்ளவிருக்கிறார்கள்.
வரும் காலங்களில், அந்த ஹைட்ரஜன் குண்டு வந்திறங்கியவுடன், நரேந்திர மோடியால் தமது முகத்தை நாட்டு மக்களிடம் காட்ட இயலாது.
பிகார் இளைஞர்களே! வாக்குத் திருட்டு என்பது ‘உரிமை திருட்டு, ஜனநாயக திருட்டு, வேலைவாய்ப்பு திருட்டு’ ஆகியவற்றைக் குறிக்கும். அவர்கள் உங்கள் ரேசன் அட்டையையும் இதர உரிமைகளையும் பறித்துக்கொள்வர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.