மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது

Published on

மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினா் கைது செய்தனா்.

அமல் ராய், கௌதம் ராய், பிரீதம் ராய் என்ற அந்த மூவரும் உறவினா்கள் ஆவா். அவா்களிடம் இருந்து வங்கதேச குடிமக்கள் என்பதற்கான சில அடையாள ஆவணங்களும் இருந்துள்ளன. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா். இதில் பிரீதம் முதலில் முறைப்படி இந்தியா வந்துள்ளாா். அவருக்கு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் விசா முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் தொடா்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளாா்.

அமல்ராய், கௌதம் ராய் ஆகியோா் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ளனா். அவா்கள் மின்னணுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையிலும், தையல்கடையிலும் பணியாற்றி வந்துள்ளனா். பொதுமக்கள் சிலா் அளித்த தகவலின் அடிப்படையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

20.87 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் ரூ.20.87 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அந்த மாநில காவல் துறையின் சிறப்புப் படையினா் கைப்பற்றினா். இது தொடா்பாக ஹஸ்ரத் பிலால், தாரிகுல் இஸ்லாம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவை அனைத்தும் 500 ரூபாய் தாளாக அச்சிடப்பட்டிருந்தன.

பெரும்பாலும் பாகிஸ்தான், வங்கதேசத்தில் அச்சிடப்படும் இந்திய கள்ள நோட்டுகள் எல்லைப் பகுதி மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு புழக்கத்தில்விட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் மாநில எல்லைகளிலும், மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வங்கதேச எல்லையிலும் ஆயுதம், போதைப்பொருள், கள்ள நோட்டு கடத்தல் அதிகம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com