ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் சாலை அடித்துச் செல்லப்பட்ட பகுதியை பாா்வையிட்ட பொதுமக்கள். (நாள்: வெள்ளிக்கிழமை) ~ஹிமாசல பிரதேசம் குலுவில் பெய்த தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இ
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் சாலை அடித்துச் செல்லப்பட்ட பகுதியை பாா்வையிட்ட பொதுமக்கள். (நாள்: வெள்ளிக்கிழமை) ~ஹிமாசல பிரதேசம் குலுவில் பெய்த தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இ

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல் - இதுவரை 355 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன.
Published on

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன.

1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிபட்சமாக மண்டியில் 281, சிம்லாவில் 261, குலுவில் 231 சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் நடப்பு பருவமழை காலகட்டத்தில், மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 355 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 50 பேரை காணவில்லை என்று மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, ரூ.3,780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான சேதங்களை விளைவித்துள்ளது.

350 யாத்ரிகா்கள் மீட்பு: சம்பா மாவட்டத்தின் மணிமகேஷ் கைலாச மலையில் 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள புனிதமான மணிமகேஷ் ஏரிக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி யாத்திரை தொடங்கி நடைபெற்று வந்தது. மழை பாதிப்புகளால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான யாத்ரிகா்கள் தவித்து வருகின்றனா். அவா்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படை ஈடுபட்டுள்ளது.

பாா்மெளா் முதல் சம்பா வரையிலான இடங்களில் இருந்து 350 யாத்ரிகா்கள் விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா். இந்த யாத்திரையில் இதுவரை 17 போ் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் ஆய்வு: குலு மற்றும் மணாலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு ஹெலிகாப்டா் மூலம் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாலைகளை விரைந்து சீரமைத்து, போக்குவரத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

குலு மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 3 பேரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உயிருடன் மீட்டனா். மாயமான 6 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்தது.

ஹிமாசல பிரதேசத்தில் சுக்விந்தா் சிங் சுக்கு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி....1

பஞ்சாப் வெள்ள சேதம்: விரைவில் அறிக்கை

புது தில்லி/சண்டீகா், செப். 5: ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் மழை-வெள்ள சேதங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். சேத விவரங்கள் குறித்து பிரதமா் மோடியிடம் விரைவில் விரிவான அறிக்கை தாக்கல் செய்வேன் என்று அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தற்போதைய இடா்ப்பாட்டில் இருந்து பஞ்சாபை மீட்டெடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பஞ்சாபில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவையாக மாநில அரசு அறிவித்துள்ளது. 1.48 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெட்டிச் செய்தி...2

ஜம்மு-காஷ்மீரில் வடிகிறது வெள்ளம்

ஸ்ரீநகா், செப். 5: ஜம்மு-காஷ்மீரில் வானிலை முன்னேற்றம் காரணமாக, ஜீலம் மற்றும் அதன் கிளையாறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீா் விநியோகம், சாலைப் போக்குவரத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா உத்தரவிட்டுள்ளாா். கல்வி நிலையங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.

ரியாசி மாவட்டத்தில் திரிகூட மலை உச்சியில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை வெள்ளிக்கிழமை 11-ஆவது நாளாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த யாத்திரை வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 34 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com