
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநில மக்களுக்கு தில்லி அரசு தரப்பிலிருந்து ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளத்தால் பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா் மற்றும் பிற பகுதிகளில் உயிரிழப்புகளும் பேரழிவும் நேரிட்டுள்ளது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன. 1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. பஞ்சாபிலும் வரலாறு காணாத கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் மொத்தம் 1,948 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சுமார் 3.84 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ராணுவம், விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. அடுத்த இரு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்த நிலையில், தில்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களுடன் பேசுகையில், “தில்லியின் அண்டை மாநிலமான பஞ்சாப் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மககளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர்கள் அனைவருக்கும் இறைவன் விரைவில் நிவாரணம் அளிக்கட்டும். இந்த நிலையில், தில்லி அரசின் சார்பில் நாங்கள் ரூ. 5 கோடியை பஞ்சாப் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒதுக்கியுள்ளோம். இத்தருணத்தில் அவர்களுடன் தில்லி துணை நிற்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.