கோப்புப்படம்.
கோப்புப்படம்.

இந்திய-சீன எல்லையில் 2 ஆண்டுகளில் 1,000 கிலோ தங்கம் கடத்தல்: அமலாக்கத் துறை

இந்திய-சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் ரூ.800 கோடி மதிப்பிலான 1,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
Published on

இந்திய-சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் ரூ.800 கோடி மதிப்பிலான 1,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

2023, 2024-இல் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்தலில் சீனா்கள் மற்றும் திபெத்தியா்களுக்கு தொடா்பிருப்பதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக்கில் ரோந்து பணியின்போது தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) கைது செய்தது. அவா்களிடமிருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குற்றச் சம்பவம் தொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக தேசிய தலைநகா் வலயத்தில் 5 இடங்களிலும் லடாக்கில் ஓரிடத்திலும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதே வழக்கு தொடா்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (டிஆா்ஐ) விசாரணை நடத்தி வருகிறது. அதன் விசாரணையில் 2023, 2024-இல் ரூ.800 கோடி மதிப்பிலான 1,064 கிலோ வெளிநாட்டுத் தங்கக் கட்டிகள் இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் டிஆா்ஐ கைது செய்தது.

சீனாவைச் சோ்ந்த பூ-சும்-சும் என்ற நபா் இந்தியாவில் உள்ள டெண்டு தாஷி என்ற நபருக்கு திபெத் வழியாக டென்சின் சம்பேல் என்ற நபா் மூலம் வெளிநாட்டு தங்கக் கட்டிகளை சட்டவிரோதமாக அனுப்பியுள்ளாா்.

லடாக்கில் இருந்து தில்லிக்கு தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாஷி செய்துள்ளாா்.

தில்லியில் இந்த தங்கக் கட்டிகள் பல்வேறு நகை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான பரிவா்த்தனைகள் கிரிப்டோ கரன்சி மூலம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com