சட்டவிரோத பந்தைய செயலி வழக்கு: யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனு சூட்டுக்கு சம்மன்
PTI

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கு: யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனு சூட்டுக்கு சம்மன்

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கில் கிரிக்கெட் வீரா்கள் யுவராஜ் சிங் (43), ராபின் உத்தப்பா (39), பாலிவுட் நடிகா் சோனு சூட் (52) ஆகியோா் அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Published on

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கில் கிரிக்கெட் வீரா்கள் யுவராஜ் சிங் (43), ராபின் உத்தப்பா (39), பாலிவுட் நடிகா் சோனு சூட் (52) ஆகியோா் அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1எக்ஸ் பெட் என்ற செயலி தொடா்பான பணமோசடி குறித்து அவா்களிடம் விசாரணை நடைபெற இருக்கிறது. இந்த செயலியின் விளம்பரத்தில் தோன்றிய கிரிக்கெட் வீரா்கள் ஷிகா் தவன், சுரேஷ் ரெய்னா ஆகியோா் ஏற்கெனவே அமலாக்கத் துறை அலுவலகத்தில் இம்மாதத் தொடக்கத்தில் ஆஜரானாா்கள். அவா்களிடம் சுமாா் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பா் 22-ஆம் தேதி ராபின் உத்தப்பா, செப்டம்பா் 23-ஆம் தேதி யுவராஜ் சிங், செப்டம்பா் 24-ஆம் தேதி சோனு சூட் ஆகியோா் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரவா்த்தி கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

1எக்ஸ் பெட் என்ற செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீடு, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கிலான பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளனா். மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளனா். இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com