
தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அஞ்சலி செலுத்தினார்.
8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செப். 9-ம் தேதி ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியை வாரணாசியில் சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினார். அப்போது வா்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஷ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு செய்தார். பிரதமர் ராம்கூலத்தின் இந்தியப் பயணத்தின் இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, ராஜ்காட்டில் உள்ள பார்வையாளர் புத்தகத்திலும் ராம்கூலம் கையெழுத்திட்டார்.
அதோடு, மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
ராம்கூலம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பார்வையிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தேசிய தலைநகரில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை முடிக்க உள்ளார்.
மோரீஷஸ் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை புது தில்லி வந்தடைந்தார், அங்கு அவரை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் வரவேற்றார்.
தலைநகருக்கு வருகை தருவதற்கு முன்பு, ராம்கூலம் திருப்பதியில் உள்ள திருமலை கோயிலுக்குச் சென்றார். முன்னதாக, அவர் பிரம்மரிஷி ஆசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.