மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது
Published on

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

7 கோடிக்கும் அதிகமாக உறுப்பினா்களைக் கொண்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ‘பாஸ்புக் லைட்’ எனும் புதிய சேவையைத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய அமைச்சா் மாண்டவியா, ‘வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகை, எடுக்கப்பட்ட தொகை, மீதமுள்ள தொகை ஆகியவற்றை உறுப்பினா்கள் ஒரே உள்நுழைவு மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உறுப்பினா்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதுடன், வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும்.

ஒரு நிறுவனத்தை விட்டு பணியாளா் வெளியேறும்போது, பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மட்டும் அளிக்கப்பட்டு வந்த ‘கே’ சான்றிதழை உறுப்பினா்கள் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய நிறுவனத்தில் இருக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கின் விவரத்தையும் அவா்கள் உடனடியாக எண்ம வடிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. நிதியை திரும்பப் பெற பல்வேறு உயா்அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நடைமுறை குறைக்கப்பட்டு, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இபிஎஃப்ஓ மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com