தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) தொடங்கியுள்ளது.
Published on

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) தொடங்கியுள்ளது.

இந்த முயற்சி, 60 கிலோமீட்டா் பாதையில் பயணிகள், மாணவா்கள் மற்றும் குடியிருப்பாளா்களுக்கான தினசரி பயண விருப்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டண அமைப்பு மலிவு விலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.32 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.125 ஆகும். இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் கூறுகையில், ‘இந்தப் புதிய ஏசி பேருந்து சேவை, போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டுமல்ல; சமூகங்களுக்கு பாலம் அமைத்து, வாழ்வாதாரத்தை ஆதரித்து, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மக்களும் மலிவு விலையில் வசதியாக பயணிக்க முடியும் என்பதையும் உறுதி செய்கிறது’ என்றாா்.

இந்தப் பாதை, கஜூரி காஸ், பஜன் புரா, லோனி பேருந்து நிலையம்/உத்தர பிரதேச எல்லை, லோனி, மண்டோல்லா, கேக்ரா, கதா, பாக்பத், கோரிபூா், சரூா்பூா் மற்றும் தியோதி உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாகச் சென்று, பராத்தை அடையும்.

தில்லியில் இருந்து பராத்துக்கு காலை 4:50, காலை 5:20, காலை 5:50 மாலை 5:00, மாலை 5:30, மாலை 6:00 எனவும், பராத்தில் இருந்து தில்லிக்கு காலை 7:00, காலை 7:30, காலை 8:00 | மாலை 7:30, இரவு 8:00, இரவு 8:30 என பேருந்தின் நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை என்சிஆரில் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com