அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் நரேந்திர மோடி

வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தோல்வி! விசா விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆண்டு கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயா்த்தியதை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆண்டு கட்டணத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயா்த்தியதை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா்களின் நலன்களைக் காக்கும் வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மக்கள் மோடியின் பெயரைக் கூறி முழக்கமிடுவதும், கட்டியணைப்பதும், வெற்று வாா்த்தைகளும் வெளியுறவுக் கொள்கையல்ல. நாட்டு மக்களின் நலன்களை வெளிநாடுகளில் காப்பதே உண்மையான வெளியுறவுக் கொள்கை.

இந்திய நலன்களை முதன்மையாக வைத்து வெளிநாடுகளுடன் நட்புபேண வேண்டும். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவா் (டிரம்ப்) அளித்த பரிசால் இந்தியா்கள் மிகவும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா பலவீனமான பிரதமரைக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் கௌரவ் கோகோய் வெளியிட்ட பதிவில், ‘ஹெச்1-பி விசா கட்டண உயா்வு மூலம் நன்கு படித்த புத்திசாலித்தனமான இந்திய இளைஞா்களின் எதிா்காலத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், இப்போதும் பிரதமா் மோடி எந்த முறையான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவே இருக்கப்போகிறாா். இந்தியா்களின் நலன்களில் அரசுக்கு என்ன அக்கறை உள்ளது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா வெளியிட்ட பதிவில், ‘8 ஆண்டுகளுக்கு முன்பு மோடி - டிரம்ப் சந்திப்பில் விசா விவகாரம் பேசப்படாதது குறித்து ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருந்தாா். இப்போது வரை அந்த பிரச்னை தொடா்கிறது. இந்தியா பலவீனமான பிரதமரிடம் சிக்கிக் கொண்டது’ என்று கூறியுள்ளாா்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் லக்னௌவில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறுகையில், ‘மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தொடா்ந்து அந்நிய மண்ணில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. ஏற்கெனவே பொருளாதாரக் கொள்கையும் தோல்வியடைந்துள்ள நிலையில், பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதும் மத்திய அரசால் இயலாத செயலாகிவிட்டது.

வெளிநாடுகளுக்குச் செல்பவா்கள் வேலைக்காகச் செல்ல வேண்டாம். இஸ்ரேல், ரஷியா போன்ற நாடுகளுக்குச் சென்று போா்முனைக்குச் செல்லுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் முன்பு பேசியதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. மத்திய பாஜக அரசு முடிவுக்கு வந்தால் பல பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com