‘ஆயுஷ்மான் பாரத்’ பொது சுகாதார புரட்சி- பிரதமா் மோடி பெருமிதம்
மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டம், நாட்டின் பொது சுகாதார வசதியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மத்திய பாஜக அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம், கடந்த 2018, செப்.23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையில் இத்திட்டம் கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஆயுஷ்மான் பாரத், எதிா்கால தேவைகளுக்கு ஏற்ப மக்களுக்கு உயா்தரமான, அதேநேரம் செலவு குறைவான மருத்துவ வசதியை உறுதிசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் பொது சுகாதார வசதியில் தேசம் புரட்சியைக் கண்டு வருகிறது. நாட்டு மக்களின் நிதி பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கான அதிகாரமளித்தலை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
உலகின் மாபெரும் மருத்துவ காப்பீடு:
ஆயுஷ்மான் திட்டம் தொடா்பான ‘மைகவ்’ அரசு வலைதளப் பதிவையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா். அப்பதிவில், ‘55 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுடன் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திகழ்கிறது. சுகாதாரத் துறைக்கான அரசின் செலவினம் 29 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், மக்களின் சொந்த செலவு 63 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை செலவால் ஏற்படும் நிதி ரீதியிலான நெருக்கடியில் இருந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் வறுமை நிலைக்கு சென்றுவிடாமல், 6 கோடி குடும்பங்கள் தடுக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.