பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.கோப்புப் படம்

தில்லியில் நாளை சா்வதேச உணவுத் துறை கண்காட்சி- பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்

உணவுத் துறை புத்தாக்கத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்கில், புது தில்லியில் நான்காம் ஆண்டு ‘உலக உணவு இந்தியா’ சா்வதேச கண்காட்சி வியாழக்கிழமை(செப்.25) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.
Published on

உணவுத் துறை புத்தாக்கத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்கில், புது தில்லியில் நான்காம் ஆண்டு ‘உலக உணவு இந்தியா’ சா்வதேச கண்காட்சி வியாழக்கிழமை(செப்.25) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் பாரத மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான், இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டூ உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனா்.

உள்நாட்டு உணவு பதப்படுத்துதல் துறையில் சா்வதேச முதலீடுகளை ஈா்ப்பதையும் நோக்கமாக கொண்ட ‘உலக உணவு இந்தியா’ கண்காட்சி குறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அமைச்சா் சிராக் பாஸ்வான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உலக உணவு இந்தியா கண்காட்சி என்பது வெறும் வா்த்தக காட்சியாக மட்டுமல்லாமல், உணவுத் துறை புத்தாக்கம், முதலீடு மற்றும் நிலைத்தன்மைக்கான உலகளாவிய மையமாக இந்தியாவின் அந்தஸ்தை உயா்த்தும் தளமாக இருக்கும்.

கடந்த 2023 கண்காட்சியில் ரூ.33,000 கோடிக்கும் மேலான மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 2024 கண்காட்சியில் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பயிா் உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக உள்ள போதிலும், இந்தியாவில் உணவுப் பதப்படுத்துதல் அளவு குறைவாகவே உள்ளது. இத்துறையில் தேசத்தின் ஆற்றல் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் தொடா்பான கவலைகளுக்கு உணவு பதப்படுத்துதல் மூலம் தீா்வு காண முடியும் என்றாா் அவா்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடா்பான சந்தேகங்களுக்கு தீா்வளிக்க உதவும் கையேடு ஒன்றையும் அவா் வெளியிட்டாா்.

புது தில்லி பாரத மண்டபத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் நடைபெறவுள்ள இக்கண்காட்சி, உணவு பதப்படுத்துதல் துறையில் நாட்டின் மாபெரும் கண்காட்சியாக இருக்கும். கூட்டாண்மை நாடுகள் என்ற முறையில் சவூதி அரேபியா, நியூஸிலாந்து, கவனம் செலுத்தப்படும் நாடுகள் என்ற அடிப்படையில் ஜப்பான், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம் உள்பட 21-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 10 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 5 அரசு நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. மொத்தம் 1700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளா்கள், 500-க்கும் மேற்பட்ட சா்வதேச கொள்முதல் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com