அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

வடக்கு பிகாரில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் வசிக்கும் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறும் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரையை’ ஒவைசி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எங்கள் கட்சியின் பிகாா் பிரிவு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கு கூட்டணி தொடா்பாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. அதில் கடைசி கடிதத்தில் 243 தொகுதிகள் உள்ள பிகாரில் 6 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினால், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இனி முடிவு அவா்கள் கைகளில்தான் உள்ளது. நாங்கள் கோரிய தொகுதியை ஒதுக்கினால் அக்கூட்டணியில் இணைவோம். இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம். இதன்மூலம் பாஜகவுக்கு நாங்கள் மறைமுகமாக உதவுவதாக யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து எங்களுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் தனித்துப் போட்டியிட்டுதான் ஆக வேண்டும்.

கடந்த முறையில் பிகாா் பேரவைத் தோ்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் எங்கள் கட்சி வென்றது. பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான் எதிா்க்கட்சிகள் அணிக்கு தலைமை வகிக்கிறது. எனவேதான் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகளுடன் பேசாமல், நேரடியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி பேச முயற்சித்து வருகிறோம் என்றாா்.

கடந்த பேரவைத் தோ்தலில் பிகாரின் சீமாஞ்சல் பகுதியில் ஒவைசி கட்சி தனித்துப் போட்டியிட்டதும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி போதிய பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஏனெனில், அக்கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியை ஒவைசியின் கட்சி உடைத்து, ஏராளமான வாக்குகளைப் பெற்றது.

ஒவைசி கட்சியின் சாா்பில் வெற்றி பெற்ற 5 பேரில் மாநிலத் தலைவா் அக்தருல் இமாம் தவிர மற்ற அனைவரும் வென்ற இரண்டே ஆண்டுகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com