பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பிஎஸ்எஃப் மையம் தொடக்கம்
புது தில்லி: பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் செயற்கை நுண்ணறவு (ஏஐ), புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) ஆகிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு மையம் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி திறந்து வைத்தாா்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட இந்த மையத்துக்கு முடிவு ஆதரவு அமைப்பு (டிஎஸ்எஸ்) என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்எஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஏஐ மற்றும் ஜிஐஎஸ் ஆகிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய டிஎஸ்எஸ் மையத்தின் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைத்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். எல்லை நிலவரங்கள் தொடா்பான தகவல்கள் உடனடியாக பிஎஸ்எஃப் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு ஜிஐஎஸ் மூலம் அனுப்பப்பட்டு அடுத்தகட்ட திட்டத்துக்கு வழிவகுக்கும். இதனால் எல்லை மேலாண்மை எளிதாக்கப்படும்.
அடுத்தகட்டமாக திறந்தவெளி புலனாய்வு கருவிகள், பெருந்தரவுகள் மற்றும் இந்திய வானிலை மையத்தின் தரவுகளுடன் டிஎஸ்எஸ் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.