அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்
Center-Center-Delhi

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

அக்டோபா் மாதத்துக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் புதிய மாடல் மின்சார வாகனங்களில் இந்த செயற்கை ஒலி அமைப்பு பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
Published on

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே நேரம், அக்டோபா் மாதத்துக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் புதிய மாடல் மின்சார வாகனங்களில் இந்த செயற்கை ஒலி அமைப்பு பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

மற்ற வாகனங்களைப் போன்று அல்லாமல், மின்சார வாகனங்கள் எந்தவித இரைச்சலும் இன்றி இயங்குவதால், இது வருவதை பாதசாரிகளும் மற்ற வாகன ஓட்டிகளும் உணர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதுதொடா்பான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபா் மாதத்துக்கு பிறகு உறுபத்தி செய்யப்படும் அனைத்து புதிய மாடல் மின்சார வாகனங்களிலும் அது இயங்கும்போது செயற்கை ஒலி எழும் வகையிலான எச்சரிக்கை அமைப்பு (ஏவிஏஎஸ்) இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.

அதே நேரம், ஏற்கெனவே இயங்கி வரும் காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பாக இந்த ஏவிஏஎஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த அமைப்பு, ‘ஏஐஎஸ்-173’ என்ற மின்சார வாகனங்களுக்கான தரக் குறியீட்டில் குறிப்பிட்டுள்ள கேட்கக்கூடிய அளவிலான ஒலியை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பன் மற்றும் சில ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது.

X
Dinamani
www.dinamani.com