
பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்கல்லாக விளங்கியதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் நமது முப்படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த மே 7 முதல் 10-ஆம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தன. அப்போது இந்திய விமானப் படையின் ஒருங்கிணைந்த வான் கட்டளைப் பிரிவு, ராணுவத்தின் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படையின் திரிகன் கட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது.
முப்படைகளிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பானது முக்கியத்துவம் வாய்ந்தது. முப்படைகளில் ஒவ்வொன்றும் மற்ற படைகளின் சவால்களை மதித்துச் செயல்பட வேண்டும். முப்படைகளின் ஒருங்கிணைப்பு தேசத்தின் நிலைத்தன்மைக்கு அவசியம்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்கல்லாக விளங்கியது.
நமது தேசியப் பாதுகாப்புக்கு கூட்டுச் செயல்பாடு என்பது அடிப்படைத் தேவையாக உருவெடுத்துள்ளது. முப்படைகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பதிலடி கொடுக்கும் திறன்வாய்ந்தவையாக இருக்கின்றன. நிலம், நீர், வான், இணையவெளி ஆகியவற்றின் கூட்டுத் தன்மை வெற்றியை உறுதிப்படுத்தும் காரணியாக அமைகிறது.
அண்மையில் தளபதிகளின் ஒருங்கிணைந்த கருத்தரங்கு கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கூட்டுச் செயல்பாடு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தினார்.
முப்படைகளிடையே கூட்டுச் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே நமது அரசின் நோக்கமாகும்.
நமது முப்படையினர் பனி படர்ந்த மலைகள் முதல் பாலைவனம் வரை, அடர்ந்த காடுகள் முதல் ஆழ்கடல் வரை பல்வேறு பகுதிகளிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிகின்றனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.