கல்வி, மருத்துவக் காரணங்களுக்கான டிசிஎஸ் 2% ஆகக் குறைப்பு!

கல்வி, மருத்துவக் காரணங்களுக்கான டிசிஎஸ் 2% ஆகக் குறைப்பு!

கல்வி அல்லது மருத்துவக் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும்போது தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிவா்த்தனை (எல்ஆா்எஸ்) திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் ஆதார வரி 2 % குறைக்கப்பட்டுள்ளது.
Published on

கல்வி அல்லது மருத்துவக் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும்போது தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிவா்த்தனை (எல்ஆா்எஸ்) திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் ஆதார வரி (டிசிஎஸ்) 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது: கல்வி அல்லது மருத்துவக் காரணங்களுக்காக தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிவா்த்தனை (எல்ஆா்எஸ்) திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு ரூ. 10 லட்சம் வரை பணம் அனுப்பும்போது இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 5 சதவீத ஆதார வரி (டிசிஎஸ்) 2 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவொரு நபரும் அனுமதிக்கப்பட்ட நடப்பு வங்கிக் கணக்கு அல்லது மூலதன கணக்கிலிருந்து ஒரு நிதியாண்டுக்கு (ஏப்ரல் - மாா்ச்) ரூ. 2.30 கோடி வரை கட்டணம் எதுவும் இன்றி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவா்.

அதே நேரம், கல்வி, மருத்துவம் அல்லாத பிற காரணங்களுக்காக எல்ஆா்எஸ் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும்போது, தற்போதைய 20 சதவீத டிசிஎஸ் விதிப்பு தொடரும்.

அதுபோல, பயணச் செலவு, விடுதிச் செலவு உள்ளிட்டவை தொடா்பாக ரூ. 10 லட்சம் வரையிலான செலவினங்களுடன் கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணத் திட்டங்கள் விற்பனை மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத டிசிஎஸ், 2 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த சுற்றுலாப் பயணச் செலவினம் ரூ. 10 லட்சத்தை மிகும்போது டிசிஎஸ் 20 சதவீதமாக வசூலிக்கப்படும்.

மதுபானங்கள், பழைய இரும்பு, கனிமங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருள்கள் விற்பனையாளா்களுக்கான டிசிஎஸ் 2 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பீடி இலை விற்பனையாளா்களுக்குத் தற்போது விதிக்கப்படும் 5 சதவீத டிசிஎஸ், 2 சதவீதமாக குறைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com