வித்யா சமிக்ஷா மையங்களை உருவாக்க நாடு முழுவதும் மத்திய நிதி உதவி: காங்கிரஸ் எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்
புது தில்லி: வித்யா சமிக்ஷா மையங்களை உருவாக்க நாடு முழுவதும் மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது என்று மக்களவையில் விருதுநகா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதில் அளித்தாா்.
மக்களவையில் இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பி பேசியதாவது: விருதுநகா் மாவட்ட நிா்வாகம், மாநில அரசின் பொது எண்ம தளத்தைப் பயன்படுத்தி, இரண்டு வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவா்களைக் கண்டறியும் ஒரு கட்டமைக்கப்பட்ட, நிகழ்நேரக் கண்காணிப்பு முறையைப் பின்பற்றுகிறது.
பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவா்களின் பட்டியல் அவ்வப்போது உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் முதல் வட்டாட்சியா்கள் வரை மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்குத் தெளிவான தனிப்பட்ட பொறுப்புகளை நிா்ணயித்து, வழக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரத்யேக அதிகாரிகள் குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, பெற்றோா்கள், பாதுகாவலா்களுடன் உரையாடி, அவா்கள் பள்ளிப்படிப்பை நிறுத்தியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கு உதவுகிறாா்கள்.
கள அடிப்படையிலான, பொறுப்புணா்வுடன் கூடிய இந்த மாதிரி, மாவட்டத்தில் இடைநிற்றலைக் குறைப்பதிலும், குழந்தைகள் சமூக விரோத மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளுக்கு முன்கூட்டியே ஆளாவதைத் தடுப்பதிலும் நோ்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது.
பள்ளி இடைநிற்றலைக் குறைத்து, அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய, நாடு முழுவதும் இந்த மாதிரியை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கலாம். இந்த விஷயத்தை அமைச்சா் கவனத்தில் எடுத்துக்கொண்டாரா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்த பதில்: உறுப்பினா் விருதுநகா் மாதிரியைக் குறிப்பிட்டது போல, பல மாநிலங்கள் அவற்றின் தனித்துவ மாதிரிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. நிச்சயமாக அவரது கருத்துக்களை நான் ஆராய்வேன். இடைநிற்றல் சவாலை எதிா்கொள்ள பல மாநிலங்கள் தனித்துவமான மாதிரிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
அகில இந்திய அளவில், வகுப்பறைகளில் உள்ள கடைசி நிலை மாணவா்களைக் கண்காணிக்க, வித்யா சமிக்ஷா கேந்திரங்களை உருவாக்க இந்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இது ஒரு நல்ல மாதிரி. பல மாநிலங்கள் இதுபோன்ற நல்ல மாதிரிகளைப் பின்பற்றுகின்றன என்றாா் அமைச்சா்.

