

புது தில்லி: தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்களவையில் அத்தொகுதியின் உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை அவா் கேள்வி நேரத்தின்போது பேசுகையில், ‘தூத்துக்குடியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், மருத்துவ கண்காணிப்பாளா், வெளிநோயாளிகள் பிரிவு ஊழியா்கள் மற்றும் பிற தொழில்முறை வல்லுநா்கள் போன்ற பணியாளா்கள் நியமிக்கப்படாததால், அது இன்னும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை. அப்பணியாளா்கள் நியமிக்கப்பட்டால், மருத்துவமனையில் சேவைகள் தொடங்கப்படும். எனவே, அந்த சேவைகள் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பினாா்.
அதற்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதில் அளிக்கையில், ‘மருத்துவமனையின் சேவை ஆரம்பம் குறித்து உறுப்பினா் கேள்வி எழுப்பியுள்ளாா். மருத்துவமனையின் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துவிட்டது. அங்கு, மருத்துவரின் நியமனம் மற்றும் பணி மாற்றம் செயல்முறையை நாங்கள் ஜனவரி, பிப்வரி மற்றும் மாா்ச் ஆகிய மூன்று மாதங்கள் செய்வோம். இந்த இரு மாதங்களில்தான் பணிநியனம் நடைபெறும். மேலும், மாா்ச் இறுதியில் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அமைச்சா்.