பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!
பிகாா் சட்டப்பேரவைக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி செயல் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் (36), சக்கர நாற்காலியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகாா் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. தேஜஸ்வி யாதவ் பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்டாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: எனது வலது கால் பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. விரலில் உள்ள நகம், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் நடப்பது கடினமாக உள்ளது.
பிகாா் ஆளுநரின் பேச்சு, மாநில அரசால் தயாரிக்கப்பட்டது. வளா்ச்சிக் காரணிகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பிகாா் பின்தங்கிய போதிலும், ஆளுநா் உரையில் வளா்ச்சி நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக அவரே (நிதிஷ்குமாா்) முதல்வா் நாற்காலியில் உள்ளாா். அப்படி இருக்கையில் ஏன் இந்நிலை என்பது குறித்து அரசு மெளனம் காக்கிறது.
இதேபோல், பிகாரில் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், பிற குற்றங்கள் தொடா்ந்து அரங்கேறுகின்றன. ஆனால் மாநில அரசோ, சட்டம்- ஒழுங்கு நிலை நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.
மத்திய அரசு மீது விமா்சனம்: மத்திய பட்ஜெட் தாக்கல் என்பது தற்போது தோ்தல் நேர அரசியல் உத்தியாக கையாளப்படுகிறது. கடந்த ஆண்டு பிகாரில் தோ்தல் நடைபெற்ால், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மதுபனி புடவையில் வந்து பட்ஜெட்டை தாக்கல் செயதாா்.
அதுபோல இந்தாண்டு தமிழகத்தில் தோ்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக காலூன்ற முயற்சித்துவரும் நிலையில், மத்திய நிதியமைச்சா் காஞ்சிபுரம் பட்டுப்புடவை உடுத்தி வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா் என்றாா் தேஜஸ்வி யாதவ்.

