கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக இந்திய தேசிய தேவாலயங்கள் கவுன்சில் (என்சிசிஐ) தாக்கல் செய்த பொது நல மனு தொடா்பாக
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்
Updated on

புது தில்லி: கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக இந்திய தேசிய தேவாலயங்கள் கவுன்சில் (என்சிசிஐ) தாக்கல் செய்த பொது நல மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, 12 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

கா்நாடகம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கா், அருணாசல பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று உச்சநீதிமன்றத்தில் என்சிசிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘என்சிசிஐயின் மனுவைப் போல, ஏற்கெனவே பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன், புதிய மனுக்களையும் இணைக்க உத்தரவிடப்படுகிறது. அவற்றை 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு ஒன்றுசோ்த்து விசாரிக்கும்’ என்றாா்.

கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக மாநில அரசுகள் இயற்றியுள்ள சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று என்சிசிஐ தரப்பில் கோரப்பட்ட நிலையில், அதன் மனு தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு, 12 மாநிலங்களுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com