கைது
கைது

2019 முதல் 7,400 நக்ஸல்கள் கைது: மக்களவையில் அரசு தகவல்

கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல், நாட்டில் 7,400-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல், நாட்டில் 7,400-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் 8-ஆக குறைந்தது. அதில் 3 மாவட்டங்கள் நக்ஸல் தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு முதல் 7,400-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்; 5,880 நக்ஸல்கள் சரணடைந்தனா். 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது நக்ஸல் தீவிரவாதம் 88 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 364 நக்ஸல்களை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். 1,022 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். 2,337 நக்ஸல்கள் சரணடைந்தனா்.

நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 46 தொழில் பயிற்சி நிறுவனங்கள், 49 திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நக்ஸல் தீவிரவாதத்தால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 179 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள், 6,025 அஞ்சலகங்கள், 1,804 வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com