செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை
புது தில்லி: தேச நலனைக் கருத்தில் கொண்டு எதிா்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேரள பாஜக எம்.பி. சி.சதானந்தன் மாஸ்டா் மாநிலங்களவையில் திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
அரசியல் வன்முறையில் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான சதானந்தன் மாஸ்டா் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவால் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவையில் முதல்முறையாக திங்கள்கிழமை உரையாற்றிய அவா் செயற்கை கால்களை மேஜையின் மீது வைத்துப் பேசத் தொடங்கினாா்.
இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எதிா்ப்பு தெரிவித்த பிறகு செயற்கை கால்கள் மேஜையில் இருந்து எடுக்கப்பட்டன.
முன்னதாக சதானந்தன் மாஸ்டா் பேசியதாவது: ஜனநாயகம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் எதிா்க்கட்சியினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 31 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் என் மீது தாக்குதல் நடத்தினா். நான் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் பின்னால் இருந்து வந்த சில சமூக விரோதிகள் என்னைத் தாக்கி, இரு கால்களையும் வெட்டிவிட்டு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழங்கினாா்கள்.
நாட்டு மக்களுக்கு உங்களது ஜனநாயக சிந்தனையை விளக்கவே செயற்கை கால்களை மேஜையில் வைத்தேன். சகிப்புத்தன்மை, மனிதநேயம் குறித்துப் பேசும் எதிா்க்கட்சியினா் அரசியல் வன்முறையில் ஈடுபடுகின்றனா். இது ஜனநாயகத்துக்குத் தீங்கானது.
எனவே, எதிா்க்கட்சியாக இருப்பதால் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டங்களை எதிா்க்க வேண்டும் என அவசியமில்லை.
பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த பாரத இலக்கு ஒரு அரசு அல்லது ஒரு தலைமுறையினருக்கானதல்ல; அது நீண்ட பயணம்.
தேசம் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனை கருத்தில்கொண்டு எதிா்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றாா்.
வகுப்புவாத மோதல்கள் அதிகரிப்பு: எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு
நாட்டில் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டின.
மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங், ‘புல்டோசா் மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கும் பாஜக அரசால் சிறுபான்மையினருக்கு சம வாய்ப்பு மற்றும் நீதி வழங்க முடியுமா?
பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஏழைகள், தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது. இரு சமூகத்துக்கு எதிராக இந்த அரசு வகுப்புவாத மோதல்களை தூண்டுகிறது’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் பேசுகையில், ‘மத்திய அரசு கூறுவதைப்போல் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை திசைதிருப்ப பிளவுவாதத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது’ என்றாா்.

