

இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) தேசிய பளு தூக்குதலில் மூன்று தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு இன்றைய ஒரே நாளில் மூன்று தேசிய சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார்.
தேசிய பளு தூக்கும் போட்டிகள் பிப்.3 முதல் பிப்.14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீரா பாய் சானு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 86, 89 கிலோ எடையைத் தூக்கினார். 91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்ததாக க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக (89 + 116) 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
கடந்தாண்டு நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி வென்றிருந்தார்.
தற்போது, 6 கிலோ அதிகமாக தூக்கியுள்ள மீராய்பாய் சானு தனது திறனை கணிசமாக உயர்த்தியுள்ளார்.
அடுத்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லும் முனைப்பில் மீராபாய் சானு கடினமாக உழைத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.