

சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுகள் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ராணுவத் தளபதியாக கடந்த 2019 முதல் 2022 வரை பதவி வகித்த ஜெனரல் எம்எம் நரவணே, ”ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டிஸ்டினி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில், அந்த புத்தகத்தில் சீன ஊடுருவல் பற்றி அவர் எழுதியிருப்பவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ராணுவத் தளபதியாக பணியாற்றியபோது, 2020 ஆகஸ்ட் 31 இரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்தபோது, வீரர்கள் பதிலடி கொடுக்க தயாராக இருந்தும், அரசின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தில் இடம்பெற்ற விஷயங்களை கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியபோது, அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, புத்தகத்தில் நரவணே குறிப்பிட்டிருக்கும் தகவலை மேற்கோள்காட்டி பேசினார்.
”இந்தப் புத்தகத்தில் லடாக் பற்றிய முழு விவரத்தையும் நரவணே எழுதியுள்ளார். சீன ஊடுவலின்போது முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீனப் படைகள் கைலாஷ் முகடுக்கு வந்துவிட்டன, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாக அவர் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் அவர் கேட்டுள்ளார். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர், மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தபோது, உயர்நிலைக் குழுவிடம் கேட்பதாகக் கூறியுள்ளார். உயர்நிலைக் குழுவின் நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் எல்லைக்குள் வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக்கூடாது என்பதுதான்.
நரவணேவும், இந்திய ராணுவமும் சீனப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பின. ஏனெனில், அவை இந்திய எல்லைக்குள் வந்துவிட்டன.
பின்னர், பிரதமர் மோடி, “எது சரி என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்” என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளைச் செய்யவில்லை, "இது என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று கூறி, ராணுவத் தளபதியை அவர் விரும்பியதைச் செய்யச் சொல்லியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புத்தகத்தில் எழுதியுள்ள நரவணே, 'நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன்' என்று புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்றும், வந்தால் நரவணேவின் புத்தகத்தைப் பரிசாக அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.