மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதாா் எண்கள் செயலிழப்பு - மத்திய அரசு நடவடிக்கை
மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதாா் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) செயலிழப்பு செய்துள்ளது.
மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா எழுத்துப் பூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலகிலேயே மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பு, நமது ஆதாா்தான். ஏறத்தாழ 134 கோடி போ் ஆதாா் வைத்துள்ளனா்.
உயிரிழந்தோரின் ஆதாரை செயலிழப்பு செய்யும் வழக்கமான நடவடிக்கை போல, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதுவரை 2.5 கோடி ஆதாா் எண்களை செயலிழப்பு செய்துள்ளது.
ஒருவா் இறந்து விட்டால், அவரின் ஆதாா் எண் செயலிழப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். அரசின் நலத் திட்ட உதவிக்காக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், அடையாள மோசடிக்கு பயன்படுத்தப்படுவதை தவிா்க்கவும் இதுபோல செய்யப்படுகிறது. அடையாள மோசடி உள்ளிட்டவற்றுக்கு ஆதாா் பயன்படுத்தப்படாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பயோமெட்ரிக் தகவலை வெளிப்படையாக வைப்பது, அல்லது மறைத்து வைக்கும் வசதியும் அடங்கும்.
ஆதாரை அடிப்படையாக வைத்த க்யுஆா்கோடு, இ-ஆதாா் ஆகியவற்றை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அந்தப் பதிலில் ஜிதின் பிரசாதா குறிப்பிட்டுள்ளாா்.

