தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவருவது குறித்து அனைத்து எதிா்க்கட்சிகளும் ஆலோசித்து, கூட்டாக முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் புதன்கிழமை தெரிவித்தது.
ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்க தீா்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வலியுறுத்திய நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் மம்தா பானா்ஜி, தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களை தனது கட்சிப் பிரதிநிதிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தங்களை அவமதிக்கும் வகையில் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக ஞானேஷ் குமாா் மீது மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரும் முன்னெடுப்பை எதிா்க்கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ‘மேற்கு வங்க முதல்வரின் யோசனையை நாங்கள் நோ்மறையாகப் பரிசீலித்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸுடன் திரிணமூல் காங்கிரஸ் ஏற்கெனவே பேசியுள்ளது. ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் ஆலோசித்து, கூட்டாக முடிவெடுக்கும்’ என்றாா். அதேநேரம், மம்தாவின் யோசனை குறித்து கருத்து தெரிவிக்க மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மறுத்துவிட்டாா்.
அகிலேஷ் ஆதரவு: தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவர சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
எஸ்ஐஆா் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தானே ஆஜராகி மம்தா வாதிட்டதை வரவேற்று, அகிலேஷ் கூறியதாவது:
பாஜகவின் கருப்புச் செயல்களுக்கு எதிராக கருப்பு அங்கி அணிந்துள்ளாா் மம்தா. நாங்கள் அவரது பக்கம் உள்ளோம். வாக்குரிமையை இழந்தால், அனைத்தையும் இழக்க நேரிடும். வாக்குரிமையைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றாா்.

