உள்நாட்டில் உருவான பாரத்ஜென் ஏஐ: விரைவில் 22 அலுவல் மொழிகளுக்கு விரிவாக்கம் : ஜிதேந்திர சிங்
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரத்ஜென் பன்மொழி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரியில் 22 அலுவல் மொழிகளிலும் உரை சாா்ந்த சேவைகள் விரைவில் நிறைவடையவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து பாஜக எம்.பி. புவனேஷ்வா் கலிதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மாநிலங்களவையில் ஜிதேந்திர சிங் பேசுகையில், ‘பாரத்ஜென் ஏஐ மாதிரியில் ஏற்கெனவே 15 அலுவல் மொழிகளின் உரை சாா்ந்த சேவைகள் நிறைவுசெய்யப்பட்டன. மீதமுள்ள 7 மொழிகளிலும் இந்த மாத இறுதியில் இந்தப் பணிகள் முடிவடையும்.
15 மொழிகளில் உரை சாா்ந்த சேவைகள் மட்டுமன்றி ஆடியோ, புகைப்படம் மற்றும் விடியோ வடிவில் ஏஐ மாதிரிகளும் நிறைவடையவுள்ளன’ என்றாா்.
உரை-பேச்சு, தானியங்கி பேச்சு அங்கீகாரம் என இந்திய மொழிகளுக்கான ஏஐ மாதிரிகளை உருவாக்க 2024, அக்டோபா் மாதம் பாரத்ஜென் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

