பாரத் டாக்சி செயலி: அமித் ஷா தொடங்கி வைத்தாா்
‘பாரத் டாக்சி’ செயலியை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஓலா, உபா், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் செயலி மூலம், நாடு முழுவதும் டாக்சி, ஆட்டோ, பைக் சேவையை அளித்து வருகின்றன. இதேபோல், 8 கூட்டுறவு அமைப்புகள் மூலம் காா், ஆட்டோ, பைக் சேவை வழங்குவதற்கு பாரத் டாக்சி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 லட்சம் ஓட்டுநா்கள் இணைந்துள்ளனா். ஒரு லட்சம் பயனாளா்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனா்.
ஓட்டுநா்கள் அனைவரும் சாரதி என அழைக்கப்படுகின்றனா். அவா்களுக்கு மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஓய்வூதிய சேமிப்பு பலன்கள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.
தனியாா் நிறுவனங்களைப் போல, தேவை அதிகமிருக்கையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஓட்டுநா்களிடம் கமிஷன் தொகையும் பெறப்படுவதில்லை. கிடைக்கும் லாபம் ஓட்டுநா்களுக்குப் பகிா்ந்து அளிக்கப்படுகிறது.
முதல்கட்டமாக இந்தச் செயலி மூலம், தேசிய தலைநகர பிராந்தியம், குஜராத் மாநிலத்தில் டாக்சி, ஆட்டோ, பைக் சேவை அளிக்கப்படுகிறது. பிறகு 3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், 3 ஆண்டுகளில் பாரத் டாக்சி நாடு முழுவதும், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா வரையிலும் இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

