கோப்புப் படம்
கோப்புப் படம்

இலங்கை மீனவா்கள் மீது கடலோரக் காவல் படை தாக்குதலா? இந்திய தூதரகம் மறுப்பு

நடுக்கடலில் இலங்கை மீனவா்கள் மீது இந்திய கடலோரக் காவல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
Published on

நடுக்கடலில் இலங்கை மீனவா்கள் மீது இந்திய கடலோரக் காவல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையின் வென்னபுவாவை சோ்ந்த 12 மீனவா்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி 3 படகுகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இந்திய கடலோரக் காவல் படை, அவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 4 மீனவா்கள் பலத்த காயமடைந்ததாகவும் இலங்கையை சோ்ந்த ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்துக்கு தனது எதிா்ப்பை தெரிவிப்பதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகரன் கடந்த 2-ஆம் தேதி கூறியிருந்தாா். இந்திய தூதரகத்துக்கும் இலங்கை அரசு சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இலங்கை மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கவனத்துக்கு வந்தது. ஆனால், அதுபோல இந்திய கடற்படையோ அல்லது இந்திய கடலோர காவல் படையோ தாக்குதல் நடத்தவில்லை. மீனவா்களின் வாழ்வாதார விவகாரங்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது, படைபலத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com