இந்தியா - வங்கதேசம் உறவு: மக்களவையில் மத்திய அரசு விளக்கம்
வேறு நாடுகளுடன் வங்கதேசம் கொண்டிருக்கும் நட்புறவைக் கடந்து இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவு தனிப்பட்டதாகும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியா-வங்கதேசம் இருதரப்பு உறவு, பாகிஸ்தான்-வங்கதேசம்-சீனா இடையேயான பிணைப்பு, வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தினா் கொல்லப்படுவதற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்களவையில் எழுப்பப்பட்டன.
அதற்கு இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘புவியியல், கலாசாரம், மொழி மற்றும் சமூகம் என வங்கதேசத்துடனான இந்திய உறவு வரலாற்று ரீதியானது. அந்த நாட்டுடனான உறவு மக்கள் நலனை பிரதானமாகக் கொண்டது.
வேறு நாடுகளுடன் வங்கதேசம் கொண்டிருக்கும் நட்புறவைக் கடந்து இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவு தனிப்பட்டதாகும். இருப்பினும், தேச நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அண்டை நாட்டின் அரசியல் நிலவரங்களை இந்தியா கண்காணித்து வருகிறது.
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை அதிகரிக்க வங்கதேச இடைக்கால அரசிடம் தொடா்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், வங்கதேச இடைக்கால வெளியுறவு ஆலோசகா் தௌஹீத் ஹுசைன் இடையேயான ஆலோசனையின்போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.
வங்கதேசத்தில் ஜனநாயகம், அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு தொடா்ந்து இந்தியா ஆதரவளிக்கும் என இடைக்கால அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை’ மற்றும் ‘மஹாசாகா்’ தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் அண்டை நாடுகளுடன் வா்த்தகம், மக்கள் நலன், தொலைத்தொடா்பு என ராஜ்ஜிய உறவுகளை இந்தியா தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது. பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளமையை காக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

