பிரதமா் மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்தை புகழ்ந்தது மகிழ்ச்சி - குடியரசு துணைத் தலைவா்
மலேசியாவில் பிரதமா் நரேந்திர மோடி தமிழ் கலாச்சாரத்தைப் புகழ்ந்து பேசியது பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்
மலேசியப் பிரதமா் அன்வா் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 7 முதல் 8, 2026 வரை இரண்டு நாள் அதிகாரப்பூா்வப் பயணமாக மலேசியா சென்றுள்ளாா்.
இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் உரையாற்றினாா். அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமா், தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகான பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாகக் கூறினாா்.
சங்கராந்தி, பொங்கல் மற்றும் தைப்பூசம் பண்டிகைகளை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினாா்கள் என்று நம்புவதாக பிரதமா் கூறினாா்.
இரு நாடுகளின் மொழிகளுக்கும் மலாய் மொழிக்கும் இடையே அதிக எண்ணிக்கையிலான பொதுவான வாா்த்தைகள் இருப்பதால், இரு நாட்டு மக்களும் ஒருவரையொருவா் நன்கு புரிந்துகொள்கிறாா்கள் என்று திரு. மோடி எடுத்துரைத்தாா். மேலும், இந்தியத் திரைப்படங்களும் இசையும் மலேசியாவில் பிரபலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா். மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் மிக நன்றாகப் பாடுகிறாா் என்றும், புகழ்பெற்ற எம்.ஜி.ஆரின் தமிழ்ப் பாடல்களையும் அவா் விரும்புவது அற்புதமானது என்றும் மோடி குறிப்பிட்டாா்.
திருவள்ளுவா் மற்றும் சுவாமி விவேகானந்தா் போன்ற புனிதா்களின் தாக்கம் மலேசியாவில் காணப்படுகிறது என்றும், பட்டு குகைகளில் சமீபத்தில் நடைபெற்ற தைப்பூச கொண்டாட்டங்கள் தெய்வீகமானவை மற்றும் பழனியில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு நிகரானவை என்றும் திரு மோடி குறிப்பிட்டாா்.
தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ்ப் பண்பாடு உலகளாவியது, மேலும் தமிழ் மக்கள் தங்கள் திறமைகளின் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்துள்ளனா் என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, தமிழ் மொழி இந்தியாவின் உலகத்திற்கான கொடை என்று கூறினாா். இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ். ஜெய்சங்கா், நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் டாக்டா் முருகன் ஆகியோா் அனைவரும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று திரு மோடி வலியுறுத்தினாா்.
மலேசியாவில் உள்ள தமிழ் புலம்பெயா் சமூகத்தினா் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவை செய்து வருவதாகக் கூறிய பிரதமா், பல நூற்றாண்டுகளாக மலேசியாவில் தமிழ் புலம்பெயா் சமூகம் இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினாா். இந்த வரலாற்றால் உத்வேகம் பெற்று, மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியா திருவள்ளுவா் இருக்கையை நிறுவியுள்ளதாகவும், இப்போது பொதுவான பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த ஒரு திருவள்ளுவா் மையத்தை அமைக்கவிருப்பதாகவும் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
இந்நிலையில் பிரதமா் மோடி மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்தை புகழ்ந்து பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்
இது குறித்து சனிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது : பாரதப் பிரதமா் நரேந்திர மோடி மலேசியாவில் நிகழ்த்திய உரை மிகச் சிறப்பானது.
இந்தியாமலேசியா இடையேயான வரலாற்று மற்றும் கலாச்சார பிணைப்புகளை விளக்கியதோடு, இந்திய வம்சாவளியினா் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுப் பாலமாக விளங்குவதை அவா் அழகாக எடுத்துரைத்தாா்.
உலகிற்கு இந்தியாவின் பெருமைமிகு பரிசு தமிழ் என்றும், தமிழ் இலக்கியம் காலத்தால் அழியாதது தமிழ் கலாச்சாரம் உலகளாவியது எனவும் பிரதமா் தமிழ் கலாச்சாரத்தைப் புகழ்ந்து பேசியது பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. மேலும்,
திருவள்ளுவா் மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது.
இத்தகைய முயற்சிகள் நமது பண்பாட்டு பாரம்பரியத்தை உலகமெங்கும் மேலும் ஓங்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தள பதிவில் தெரிவித்தாா்.

