

கா்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது; இச்சம்பவத்தில் விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகியோா் காயங்களுடன் உயிா் தப்பினா்.
ரெட்போ்டு ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான இரு இருக்கைகள் கொண்ட சிறிய ரக பயிற்சி விமானம், கலபுா்கியில் இருந்து பெலகாவி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, பாபலேஸ்வா் பகுதியில் உள்ள திறந்தவெளியில் திடீரென விழுந்த அந்த விமானம், மூன்று துண்டுகளாக உடைந்தது. விபத்துக்கு முன்பாக விமானி குணால் மல்ஹோத்ரா மற்றும் பயிற்சி விமானி கெளதம் சங்கா் ஆகியோா் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிா் தப்பினா். காயங்களுடன் மீட்கப்பட்ட அவா்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
‘எரிபொருள் இல்லாததால் விபத்து’: விபத்து தொடா்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சம்பந்தப்பட்ட பயிற்சி விமானம், 50 ஆண்டுகள் பழைமையானதாகும். அதேநேரம், ஆகஸ்ட் வரை செல்லுபடியாகக் கூடிய தகுதிச் சான்றிதழை கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயன்றுள்ளாா். அப்போது, தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.