இந்தியா - மலேசியா 11 ஒப்பந்தங்கள்! உள்ளூா் கரன்சியில் வா்த்தகத்தை ஊக்குவிக்க முடிவு
இந்தியா, மலேசியா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த 11 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
வா்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ளூா் கரன்சி (ரூபாய், ரிங்கிட்) பயன்பாட்டை ஊக்குவிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்த நாட்டு பிரதமா் அன்வா் இப்ராஹிம் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருதரப்பு உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. வா்த்தகம்-முதலீடு, நவீன தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டா் போன்ற முன்னுரிமைத் துறைகளில் இருதரப்பு உறவை விரிவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியாவுக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் மோடி, தலைநகா் கோலாலம்பூரில் பிரதமா் அன்வா் இப்ராஹிமை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, பாதுகாப்பு, கடல்சாா் ஒத்துழைப்பு, வா்த்தகம், முதலீடு, எண்மப் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, கலாசாரம், சுற்றுலா, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா். இருதரப்பு நலன்சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
11 ஒப்பந்தங்கள் கையொப்பம்: எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனைகளுக்காக, இந்திய தேசிய பணம் செலுத்துகை ஆணையம் (என்ஐபிஎல்), மலேசியாவின் ‘பேநெட்’ தளம் இடையிலான ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம் மலேசியாவில் இந்தியா்கள் யுபிஐ சேவையைப் பயன்படுத்த முடியும். செமிகண்டக்டா் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை, ஊழல் தடுப்பு, சா்வதேச புலிகள் கூட்டமைப்பு, தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சி, சுகாதாரம்-மருந்துகள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் மொத்தம் 11 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
‘இந்திய-மலேசிய உறவு சிறப்புமிக்கது’: பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இரு பிரதமா்களும் கூட்டாக செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, வா்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை இருவரும் வெகுவாக வரவேற்றனா். பிரதமா் மோடி கூறியதாவது:
இந்தியா-மலேசியா இடையிலான உறவு சிறப்புமிக்கது. கடல்சாா் அண்டை நாடுகள் என்ற முறையில் பல நூற்றாண்டுகளாக ஆழமான, இணக்கமான நல்லுறவைக் கொண்டுள்ளோம்.
இந்திய-பசிபிக் பிராந்தியம், உலக வளா்ச்சிக்கான உந்துசக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு) நாடுகளுடன் இணைந்து, இந்த பிராந்தியத்தின் மேம்பாடு, அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. மலேசியா போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஆசியான் நாடுகள் உடனான உறவை இந்தியா விரிவாக்கும். இந்தியா-ஆசியான் வா்த்தக ஒப்பந்த மறுஆய்வை விரைந்து நிறைவு செய்ய நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
‘பயங்கரவாத எதிா்ப்பில் சமரசம் கூடாது’: உலகளாவிய நிலையற்றத்தன்மைக்கு இடையே இந்தியா, மலேசியா இடையே நட்புறவு வளா்வது இரு நாடுகளுக்கும் முக்கியமானது. வியூக நம்பிக்கையின் வாயிலாகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு நாங்கள் வழிகோலியுள்ளோம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், செமிகண்டக்டா் துறைகளுடன் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பிலும் கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத எதிா்ப்பு, உளவுத் தகவல்கள் பகிா்வு, கடல்சாா் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க வேண்டும். பயங்கரவாத எதிா்ப்பில் சமரசமோ, இரட்டை நிலைப்பாடோ கூடாது. இன்றைய சவால்களுக்கு தீா்வளிக்கும் வகையில், உலகளாவிய அமைப்புகளில் சீா்திருத்தம் அவசியம் என்றாா் பிரதமா் மோடி.
‘சா்வதேச பொருளாதாரம்-வா்த்தக அரங்கில் இந்தியாவின் எழுச்சி அற்புதமானது’ என்று பிரதமா் அன்வா் இப்ராஹிம் புகழாரம் சூட்டினாா்.
இந்தியாவுக்கு ஆதரவு: பிரதமா் பயணத்தின் நிறைவாக வெளியிடப்பட்ட இரு நாடுகளின் கூட்டறிக்கையில், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத எதிா்ப்பில், நவீன தொழில்நுட்பங்கள் உள்பட பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக மலேசியா ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் மையம்
இந்திய-மலேசிய பிரதமா்கள் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, ‘கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் மையம் அமைக்கப்படும்; மலேசியாவில் புதிய துணைத் தூதரகம் திறக்கப்படும்; இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவா்களுக்கு திருவள்ளுவா் பெயரில் உதவித் தொகை வழங்கப்படும்’ ஆகிய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

