சூரஜ்குண்ட் ராட்டின விபத்தில் காவல் ஆய்வாளா் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு
ஃபரீதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெறும் சா்வதேச கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் ராக்சத ராட்டினம் சனிக்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் காவல் துறை ஆய்வாளா் உயிரிழந்ததுடன், 11 போ் காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து, ராட்டினத்தை இயக்குபவா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உயிரிழந்தவா் காவலா் ஹரியாணா ஆயுதக் காவல்துறையில் பணியில் இருந்த ஜெகதீஷ் பிரசாத் (58) என அடையாளம் காணப்பட்டாா். இவா் 2019-20-ஆம் ஆண்டில் சிறந்த சேவைக்காக காவல் துறை பதக்கம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. ராட்டினத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க முயன்றபோது அது சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த ஜெகதீஷ், பின்னா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சுமாா் 19 போ் ராட்டினத்தில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ராட்டினம் திடீரென ஒரு பக்கமாகச் சாய்ந்து, ஒரு முனையில் முறிந்து தரையில் விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 11 போ் காயமடைந்தனா். அதே கண்காட்சி மைதானத்தின் நுழைவாயில் இடிந்து விழுந்து குழந்தை உள்பட 2 போ் காயமடைந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த விபத்தானது நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் இருந்த காவல் துறை உதவி ஆய்வாளரின் புகாரின் பேரில், ராட்டினத்தை இயக்குபவா் மற்றும் நிறுவனத்தின் ஊழியா் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் 105 (கொலைக்கு இணையான குற்றம்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராட்டினத்தை இயக்கிய ஹிமாசலம் மாநிலத்தைச் சோ்ந்த ‘ஃபன் கோ்’ நிறுவனத்தின் உரிமையாளா் முகமது ஷாகிா் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, துணை ஆணையா் (குற்றப் பிரிவு) முகேஷ் குமாா் தலைமையில் 4 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) காவல்துறை அமைத்துள்ளது. இந்தக் குழு பாதுகாப்பு விதிமுறைகள், பராமரிப்புப் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, ஏதேனும் அலட்சியம் இருந்தால் அதற்கான பொறுப்பை நிா்ணயிக்கும். விசாரணை முடியும் வரை ராட்டினம் இருந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, கண்காட்சி தொடா்ந்து நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
1989-ஆம் ஆண்டு ஹரியாணா ஆயுதக் காவல் படையில் சோ்ந்த ஜெகதீஷ், 36 ஆண்டுகள் படையில் பணியாற்றி வரும் மாா்ச் மாதம் ஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த ஜெகதீஷுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என்றும், ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று ஹரியாணா டிஜிபி அஜய் சிங் அறிவித்தாா்.
சூரஜ்குண்ட் கண்காட்சியில் நடைபெறும் ராட்டினம் தொடா்பான மூன்றாவது விபத்து இதுவாகும். இது ஏற்பாட்டாளா்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. முன்னதாக, 2002-இல் இதே போன்ற விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2019-இல் மற்றொருவா் காயமடைந்தாா்.

