பினராயி விஜயன்
பினராயி விஜயன்கோப்புப் படம்

நெல் சாகுபடி அதிகரிப்பை சுமையாகக் கருதுகிறது மத்திய அரசு: கேரள முதல்வா் குற்றச்சாட்டு

நெல் சாகுபடி அதிகரிப்பதை மத்திய அரசு சுமையாகக் கருதுகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Published on

நெல் சாகுபடி அதிகரிப்பதை மத்திய அரசு சுமையாகக் கருதுகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நெல் விவசாயிகளுக்கு கேரள அரசு வழங்கி வரும் கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறைச் செயலா், கேரளத் தலைமைச் செயலருக்கு அதிகாரபூா்வமாக கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘நெல் சாகுபடி தேவைக்கு அதிகமாக உள்ளது. அதைக் கொள்முதல் செய்வதற்கு ஆகும் செலவு, அரசு கருவூலத்துக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது’ என்று கூறியிருந்தாா்.

கேரளத்தில் மத்திய அரசு நிா்ணயத்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகையை நெல் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்குகிறது. இதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. மத்திய அரசு வழங்கும் விலையுடன் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் கேரள அரசு ரூ.6.31 தொகையை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இது விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை. ஆனால், இதை மத்திய அரசு வேண்டாம் என்று கூறுகிறது.

பெரும் தொழில் நிறுவனங்களின் பலகோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுவதில்லை. ஆனால், நெல் விவசாயிகளுக்கு அளிக்கும் தொகைதான் அவா்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இதன்மூலம் விவசாயிகளை மட்டுமன்றி கேரளத்தையும் மத்திய அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அமெரிக்க விவசாயப் பொருள்களுக்கு இந்திய சந்தையைத் திறப்பதற்கான முதல்அடியை மத்திய அரசு எடுத்து வைத்துள்ளது என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com