

புணே மாநகராட்சியின் புதிய மேயராக பாஜகவின் மஞ்சுஷா நாக்புரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ஆர்.பி.ஐ. (ஏ) தலைவர் பரசுராம் வதேகர் தேர்வாகியுள்ளார்.
என்சிபியைச் சேர்ந்த ஷீத்தல் சாவந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் அஸ்வினி லாண்ட்கே ஆகியோர் மேயர் போட்டியிலிருந்து விலகினர். அதேபோல், என்சிபி மாநகராட்சி உறுப்பினர் தத்தாத்ரே பஹிராத் மற்றும் காங்கிரஸின் சாஹில் கேதாரி ஆகியோர் துணை மேயர் போட்டியிலிருந்து விலகியதால், போட்டியின்றி தேர்தல் நடைபெற வழிவகுத்தது.
சிம்மகட் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரான நாக்பூரே, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் போபோடி தொகுதியில் போட்டியிட்ட ஆர்பிஐ (ஏ) தலைவர் வதேகர், துணை மேயர்பதவிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
165 உறுப்பினர்களைக் கொண்ட புணே மாநகராட்சியில், பாஜக 119 இடங்களை வென்றது. அதே நேரத்தில், அஜீத் பவாரின் என்சிபி மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி(எஸ்பி) ஆகிய இரண்டும் சேர்ந்து 30 இடங்களைப் பெற்றன.
காங்கிரஸ் 15 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) ஒரு இடத்தையும் மட்டுமே வென்றது.
மத்திய அமைச்சரும், புணே மக்களவை எம்பியுமான முரளிதர் மோஹோல், நகர உள்ளாட்சி அமைப்பில் பாஜகவை பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில், மாநகராட்சி உறுப்பினர்களான நாக்புரே மற்றும் வதேகர் ஆகியோர் மேயர் மற்றும் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.