

காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ்தீப் கராஜ் சிங்குக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்மூலம் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற முதல் நபர் இவராவார்.
நீதிபதி நீலா கோகலே தலைமையிலான அமர்வு, பஞ்சாபைச் சேர்ந்த ஆகாஷ்தீப் கராஜ் சிங்குக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிட்டது.
66 வயதான சித்திக், அக்டோபர் 12, 2024 அன்று இரவு பாந்திரா கிழக்குப் பகுதியில் உள்ள தனது மகன் ஜீஷானின் அலுவலகத்திற்கு வெளியே மூன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 2024-ல் கைது செய்யப்பட்ட 22 வயதான ஆகாஷ்தீப் கராஜ் சிங் முதல் குற்றவாளி ஆவார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஜாமீன் மனுவில், தான் இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டதாகவும், தனக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தெளிவற்றவை என்று அவர் கூறினார்.
தான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் உறுப்பினராக இருந்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்த பங்கும் கூறப்படவில்லை. மேலும், இந்த வழக்கில் விசாரணை உடனடியாகத் தொடங்கப்படாது என்றும், விசாரணை இல்லாமல் சிறையில் அடைப்பது தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்றும் வாதிட்டார்.
இந்தாண்டு ஜனவரியில் இந்த வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சிறையில் உள்ளத தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் காவல்துறை 26 பேரைக் கைது செய்து, மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (MCOCA) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.